Wednesday, January 18, 2012

மாமனை மடியில் அமர்த்திய மருமகன்!

மகாவிஷ்ணு விநாயகருக்கு மாமன் முறை ஆவார். கேரள மாநிலம் கோட்டயம் மள்ளியூர் மகா கணபதி கோயிலில் மாமனான மகாவிஷ்ணுவை மருமகனான விநாயகர் தன் மடியில் அமர்த்திய கோலத்தில் அருள்பாலிக்கிறார். முழுமுதற் கடவுளான விநாயகர் ஒவ்வொரு கோயிலிலும் ஒவ்வொரு திருக்கோலத்தில் அருள்பாலிக்கிறார்.

பக்தர்களின் தரிசனத்திற்காக விநாயகர் பல்வேறு வடிவங்களில் அருள்பாலிக்கும் அற்புத தலங்கள் ...

நிறம் மாறும் விநாயகர்

கன்னியாகுமரி மாவட்டம், கேரள புரத்தில் உள்ள மகாதேவர் கோயிலில் அருளும் விநாயகர் நிறம் மாறி காட்சியளிக்கிறார். இவருக்கென தனி சன்னதியோ, மேற்கூரையோ இல்லாததால் இவர் மழையில் நனைந்தும், வெயிலில் காய்ந்தபடியும் இருக்கிறார், சந்திரகாந்த கல்லால் செய்யப்பட்ட இந்த விநாயகர் தட்சிணாயன காலத்தில் (ஆடி-மார்கழி) வெண்ணிறமாகவும், உத்தராயண (தை-ஆனி) காலத்தில் கருப்பு நிறமாகவும் காட்சியளிக்கிறார். இவருக்கு, நிறம் மாறும் விநாயகர் என்று பெயர்.

அம்மானை சாந்தப்படுத்திய பிள்ளையார்

குழந்தைகள் கோபித்துக் கொண்டிருந்தால் அம்மா, கண்ணே! மணியே என கொஞ்சி, முத்தமிட்டு, சாந்தப்படுவாள். ஆனால், பெற்றவள் கோபமாக இருக்கும் போது, எந்தப் பிள்ளையாவது சமாதானம் சொல்லுமா! நம் பிள்ளையார் சொன்னாரே! திருவனைக்காவல் என்ற சிறுநகரம் திருச்சி அருகில் இருக்கிறது. இங்கேயுள்ள ஜலசிவன் கோயிலில், அம்பாள் அகிலாண்டேஸ்வரிக்கே மரியாதை அதிகம். இவள் கலியுகத்தின் துவக்கத்தில் மக்கள் போகும் போக்கைப் பார்த்து கடும் உக்கிரமாக இருந்தாள். மக்களை அழிக்க நேரம் பார்த்துக் கொண்டிருந்த வேளையில், சிவனின் அம்சமாகக் கருதப்பட்ட ஆதிசங்கரர். இத்தலத்துக்கு வந்தார். அவர் சிவாம்சம் பொருந்தியவர் என்பதால், அம்பாளின் உக்கிரத்துக்கெல்லாம் பயப்படவில்லை. அப்படியே சுட்டெரித்தால் தான் என்ன! அவள் பாதாரவிந்தம் தானே கிடைக்கும் எனக்கருதினாரோ என்னவோ! எவ்வித அச்சமும் இல்லாமல் கோயிலுக்குள் சென்றார்.

ஒரு விநாயகர் சிலையை அம்பாள் எதிரே பிரதிஷ்டை செய்தார். பிள்ளையை அம்பாள் பார்த்தாளோ இல்லையோ, கோபம் போய்விட்டது. இந்தக் கோபத்தை வடித்தெடுத்து தாடங்கம் எனப்படும் ஒரு ஜோடி தோடுகளில் அடைத்து, அதை அம்பாளுக்கு அணிவித்து விட்டார். இப்படி, அன்னையை சாந்தப்படுத்திய அந்தப் பிள்ளையார், அம்பாளுக்கு செல்லப்பிள்ளை இல்லையா? அதனால், செல்லப்பிள்ளையார் என்றே மக்கள் அவருக்கு பெயர் சூட்டிவிட்டனர். அவர் மட்டும் நமக்கு அருள்பாலிக்காமல் இருந்திருந்தால், இவ்வுலகம் கலியுகத்தின் துவக்கத்திலேயே அம்பாளின் சீற்றத்துக்கு ஆளாகி அழிந்திருக்கும்.

பத்து கரங்களுடன் விநாயகரின் அரிய தரிசனம்

ஐந்து கரத்தனை, யானை முகத்தனை எனப் போற்றப்படும் விநாயகர், நம்நாட்டில் சில குறிப்பிட்டத் திருத்தலங்களில் மட்டுமே, பத்து கரங்களுடன் அருளாட்சிப் புரிகிறார். இந்தத் தசபுஜ கணபதி தோற்றம் காணக் கிடைத்தற்கரியது. அப்படிப்பட்ட மூன்று தலங்களைத் தரிசிப்போமே... அவற்றில் இரண்டு, கணேச சதுர்த்தி விழாவுக்குப் பெயர் போன மகாராஷ்டிரா மாநிலத்திலும், மற்றொன்று, கர்நாடகாவிலும் அமைந்துள்ளது.

யானையும், சிங்கமும் நட்பு பாராட்டும் ÷க்ஷத்ரம்!

அரபிக் கடலோரம், மங்களூரு - மும்பை தேசிய நெடுஞ்சாலையில் உடுப்பியிலிருந்து வடக்கே 22 கி.மீ. தொலைவிலும், மங்களூரிலிருந்து ஏறக்குறைய 80 கி.மீ, தொலைவிலும் உள்ளது சாளக்ராமம் எனும் சிற்றூர். இங்கு சங்கு, சக்கரம் என்ற இரு புண்ணியத் தீர்த்தக் கட்டங்களுக்கு இடையே ரம்மியமான சூழலில் அமைந்துள்ள ஸ்ரீ குரு நரசிம்மர் ஆலயத்தில் கம்பீரமாகத் தசபுஜ கணபதி எழுந்தருளியுள்ளார். கி.பி நான்காம் நூற்றாண்டில் மௌரியக் குலத் தோன்றல் ராஜா லோகாதித்யன், தன் ராஜகுரு பட்டாச்சார்யாவுக்கு நிவேதனமாக அளித்த பதினான்கு கிராமங்கள் அடங்கிய இந்தச் சாளக்ராம ÷க்ஷத்திரத்துக்குக் கூட தேசத்துப் பிராமணர்கள், ஸ்ரீ நரசிங்கப் பெருமாளையே தங்களுக்குக் குருவாகவும், குல தெய்வமாகவும் போற்றி வணங்குகிறார்கள். அதனால் இவ்விடத்துக்கு ஸ்ரீகுரு நரசிம்ம ÷க்ஷத்திரம் என்றே பெயர். ராஜகுரு ஒரு தீவிர கணபதி உபாசகர். ஒருநாள் அவரது கனவில் ஸ்ரீ நரசிம்மர், தசபுஜ கஜானனாக வல்லபை தேவியுடன் காட்சியருளி, ஆலயம் எழுப்ப உத்தரவானதால், கணேச யந்திரத்தின் மீது ஸ்ரீ நரசிம்மரை ஸ்தாபனம் செய்வித்தார். வைணவக் கோயிலில் சைவ சம்பிரதாயமே எல்லா விஷயங்களிலும் அனுஷ்டிக்கப்படுகிறது என்பது அதிசயம் தான்!

இங்கு தசபுஜ விநாயகருக்குத்தான் முக்கியத்துவம் தரப்படுகிறது. ஆலய நிகழ்ச்சிகளில், மகா கணபதி நரசிம்மப் ப்ரீத்யர்த்தம் என்றே சங்கல்பம் செய்விக்கப்படுகிறது. விநாயக சதுர்த்தியின் போது வெள்ளி ரதத்தில் விநாயகர் வீதி உலா வருவது காணக் கண் கொள்ளா காட்சியாகும். இப்பிரதேசத்தில், யானைகளும், சிங்கங்களும் விரோதம் பாராட்டாமல் நட்புடன் பழகியதைக் கண்டு பரவசப்பட்ட ராஜகுரு, இவ்விடத்தை நிர்வைர ஸ்தலம் (பகைமை பாராட்டாத பிரதேசம்) என்று குறிப்பிட்டு மகிழ்ச்சி அடைந்தாராம்! இதை உறுதி செய்யும் விதத்தில் ஆலயத்தில் ஆனை முகத்தான் தசபுஜ கஜானனனாகவும், சிங்கம், ஸ்ரீநரசிம்ம வடிவிலும் காட்சியளிக்கின்றனர்.

கிணற்றிலிருந்து வந்த கணபதி!

மகாராஷ்டிர மாநிலத்தின் புண்ணிய பூமியாகப் போற்றப்படும் புனே நகரத்தின் மையப் பகுதியில் முத்தா நதிக்கரையோரம் நெளிந்தோடும் கர்வே சாலையில் கம்பீரமாக எழுந்து நிற்கிறது தசபுஜ கணபதி ஆலயம். இதற்கு சிந்தாமணித் தீர்த்தம் என்றும் பெயருண்டு. மராட்டியப் பேஷ்வாக்களின் சர்தாராகப் பணியாற்றிய சர்தார் ஹரிவந்த் பட்கேயின் வம்சாவளியினரால் பராமரிக்கப்பட்டு வருகிறது. ஒரு சமயம், இங்குள்ள பிரபல சக்தித் தலமான பார்வதிக் குன்றுக்கருகில் ஒரு வீட்டில் கிணறு வெட்டும்போது அங்கு இச்சிலை கண்டுபிடிக்கப்பட்டது. சங்கடஹர சதுர்த்தி, கணேச சதுர்த்தி விழாக்கள் கோலாகலமாகக் கொண்டாடப்படுகின்றன.

மகாராஷ்டிராவின் ரத்னகிரி ஜில்லாவிலுள்ள சிப்லூன் டவுனுக்கருகில், ஹேத்வி எனுமிடத்தில் மலைமீது உள்ளது புராதனமான லக்ஷ்மி-கணேசர் எனும் தசபுஜ கணேசர் ஆலயம். மராட்டியப் பேஷ்வாக்களால் பராமரிக்கப்பட்டுள்ளது. அபூர்வமான, காஷ்மீரத்தில் மட்டுமே காணப்படும் வெண்ணிறப் பளிங்குக் கற்களால் வடிவமைக்கப்பட்டுள்ளார் கணேச மூர்த்தி. இரண்டு அடி உயரப் பீடத்தில், மூன்று அடி உயர வடிவில், பத்துக் கரங்களில் வெவ்வேறு ஆயுதங்களுடன், இடக்காலை மடித்து, அதன் மீது லக்ஷ்மி தேவியை இருத்திக் கொண்டு, வலக் காலைக் குந்திய நிலையில் வைத்தவாறு, மோதகத்தை இடப்புறம் நீட்டிய துதிக்கையில் வைத்துக் கொண்டு அருள்பாலிக்கிறார். தரிசிப்போரின் கண்ணையும், கருத்தையும் ஒருங்கே கவர்ந்து விடும் தோற்றம்! விநாயக சதுர்த்தி அன்று, வெண்ணிற தசபுஜ விநாயகர் தேரில் பவனி வரும் போது கூட்டம் அலைமோதும். அந்த மலைப் பிரதேசம் முழுவதும், கணபதி பப்பா மோரியா! என்ற வாழ்த்தொலி எதிரொலிக்கும்.

No comments:

Post a Comment