Wednesday, January 18, 2012

சீதை தீக்குளித்தது ஏன்?

ராவணனிடம் இருந்து மீட்கப்பட்ட சீதையின் கற்புநெறியை நிரூபிக்க தீக்குளிக்கும்படி ராமன் சொன்னதை பெண் சமுதாயம் ஏற்றுக்கொள்ளவில்லை. ராமனே இப்படி சந்தேகப்படலாமா? என்று கூறுவதுண்டு. ஆனால் சீதையால் அக்னிபகவான் தனது தூய்மையை மீண்டும் பெறவே இப்படி ஒரு நிகழ்ச்சி நடந்தது. ராவணனின் யாகசாலையில் வேலைசெய்த அக்னிபகவான் பல பாவங்களை செய்ய வேண்டியதாக இருந்தது. பல முனிவர்களையும் சாதுக்களையும் ராவணனின் உத்தரவுப்படி அவன் அழித்தான். இந்த பாவத்தில் இருந்து நீங்கி பரிசுத்தம் ஆகவேண்டுமானால் சீதாதேவி என்னுள் மூழ்கி எழவேண்டும் என கோரிக்கை விடுத்தான். ராமனும் அதை ஏற்றுக்கொண்டு சீதாவை தீயில் மூழ்கிவரும்படி உத்தரவிட்டான். பகவானின் உத்தரவை ஏற்ற சீதா தீக்குள் இறங்கினாள். அவளது கற்புத்தீ முன் அக்னியின் பாவங்கள் எல்லாம் அழிந்துபோயின. இதுதான் சீதாதேவி அக்னிக்குள் இறங்கிய வரலாறு. நெருப்பையும் பரிசுத்தமாக்கும் வல்லமை பெற்றவள் சீதா.

சீதை கடத்தப்பட்ட ஊர்

ராமனும் சீதையும் வனவாசம் செய்தபோது ராவணன் சீதையை தூக்கி சென்றான். பஞ்சவடி என்ற இடத்தில் தங்கியிருந்தபோது இந்த சம்பவம் நடந்தது. பஞ்சவடி தற்போதைய நாசிக் என்ற ஊரின் ஒரு பகுதியாகும். மும்பையிலிருந்து 117 மைல் தூரத்தில் நாசிக் அமைந்துள்ளது. இங்கு கோதாவரி ஆறு பாய்கிறது. சூர்ப்பனகை இங்கு வந்துதான் சீதையை பார்த்து தனது அண்ணனிடம் தகவல் சொன்னாள். அப்போது லட்சுமணன் அவளது மூக்கை அறுத்தான். மூக்கு அறுபட்ட இந்த இடத்திற்கு நாசிகை என்ற பெயர் ஏற்பட்டது. அதுவே காலப்போக்கில் நாசிக் என்று ஆயிற்று.

No comments:

Post a Comment